சென்னையில் நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறையினர் அதிகாலையில் இருந்து அதிரடியாய் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1980-ம் ஆண்டு இயக்குநர் பாரதிராஜாவின் கல்லுக்குள் ஈரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அருணா. இவர் சிவப்பு மல்லி, நீதி பிழைத்தது, சட்டம் சிரிக்கிறது, முதல் மரியாதை உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் அவர் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர், கேசினோ ட்ரைவ் பகுதியில் உள்ள நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை 7 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். அருணாவின் கணவர் மோகன் குப்தா, வீடுகளில் உள் கட்டமைப்பு அலங்காரப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதனால் 4 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக இந்த சோதனையை நடத்தி வருகின்றனர்.