சபரிமலை ஐயப்பன் கோயிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள நவக்கிரக கோயிலில் நாளை மறுநாள் பிரதிஷ்டை நடைபெற உள்ளது. இதனையொட்டி இன்று மாலை நடை திறக்கப்படுகிறது.
கேரளா மாநிலத்தில் சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு கேரளா மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், உலகின் பல்வேறு முனைகளில் இருந்தும் பக்தர்கள் விரதமிருந்து வழிபட வருகின்றனர்.
இந்த கோயிலில் தேவபிரசன்னத்தில் கூறப்பட்டதன்படி, மாளிகப்புரத்தம்மன் கோயிலில் புதிய நவக்கிரக கோயில் கட்டப்பட்டுள்ளது. அதன் பிரதிஷ்டை நாளை மறுநாள் (ஜூலை 13) நடைபெறுகிறது. இதனையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று (ஜூலை 11)மாலை நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையைத் திறந்து வைக்கிறார்.
கோயிலில் நாளை (ஜூலை 12) சுத்தி கலசபூஜை வழிபாடுகள் நடைபெறுகிறது. நாளை மறுநாள் காலை 11 மணிக்கு நவக்கிரக கோயிலில் பிரதிஷ்டை நடைபெறுகிறது.. அன்றைய தினம் இரவு 10 மணிக்கு வழக்கமான பூஜைகளுக்கு பின் நடை அடைக்கப்படும்.
இதனைத் தொடர்ந்து ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஜூலை 16-ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். தொடர்ந்து 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை 5 நாட்கள் ஆடி மாத சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்நாட்களில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வருவதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.