பாமக மாநில இளைஞரணி தலைவராக ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரன் நியமனம் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் நடந்த பாமகவின் பொதுக்குழுவின் தனது பேரன் முகுந்தனை இளைஞர் சங்க தலைவராக்கினார் டாக்டர் ராமதாஸ். இதற்கு மேடையிலேயே அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது தொடங்கிய பிரச்னை தற்போது கட்சி இரண்டுபட்டுக் கிடக்கிறது.
இதன் காரணமாக பாமக நிறுவனர் ராமதாஸ்க்கும், அவரது மகன் அன்புமணிக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதன் காரணமாக கட்சி இரண்டு பிரிவுகளாக இயங்கி வருகிறது.
இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு கட்சி தலைவர் அன்புமணியை கட்சியில் இருந்து நீக்குவதாக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்திருந்தார். ஆனால், அன்புமணி தலைமையில் தான் பாமக செயல்படுகிறது என்பதை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளதாக வக்கீல் கே.பாலு கூறினார். இதனால் பாமகவில் மேலும் குழப்பம் நீடித்து வருகிறது.
இந்நிலையில், விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தல் பாமக நிறுவனர் ராமதாஸ் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஜி. கே. மணியின் மகன் தமிழ் குமரனுக்கு மாநில இளைஞரணி தலைவர் பதவி வழங்கினார். அதற்கான நியமன உத்தரவை ராமதாஸின் மூத்த மகள் காந்திமதி தமிழ்குமரனிடம் வழங்கினார். இது பாமகவில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.