சீனா மீது ஏற்கெனவே 30 சதவீத வரி விதித்த நிலையில், மேலும் 100 சதவீத வரியை அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ளார்.
அமெரிக்காவின் அதிபராக டொனால்ட்டி டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். இதையடுத்து அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக, தங்கள் நாட்டின் பொருட்கள் மீது அதிக வரி விதிக்கும் நாடுகள் மீது பரஸ்பரம் வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி, சீனாவில் இருந்து இறக்குமதி பொருட்கள் மீது 145 சதவீத வரியை உயர்த்தினார். இதற்கு பதிலடி கொடுத்த சீனா, அமெரிக்க பொருட்கள் மீது 125 சதவீத வரியை உயர்த்தியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப்போர் மூண்டது.
அதேவேளை, வர்த்தகப்போரை முடிவுக்குக் கொணடுவர இரு நாடுகளும் சுவிட்சர்லாந்தில் பேச்சுவார்த்தை நடத்தின. பேச்சுவார்த்தை முடிவில் சீன பொருட்கள் மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரியை 90 நாட்களுக்கு நிறுத்துவதாக கடந்த மே மாதம் 10-ம் தேதி அமெரிக்கா அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து அமெரிக்க பொருட்கள் மீதான வரியை சீனா குறைத்தது. அதன்படி, சீனப் பொருட்கள் மீதான வரியை 145 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக அமெரிக்கா குறைத்தது. அதேபோல், அமெரிக்க பொருட்கள் மீதான வரியை 125 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக சீனா குறைத்தது. அதேவேளை, கூடுதல் வரிவிதிப்பு நிறுத்தத்திற்கான 90 நாட்கள் அவகாசம் கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி நிறைவடைந்ததையடுத்து கால அவகாசம் கூடுதலாக 90 நாட்கள் (நவம்பர் 10) வரை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 100 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று அறிவித்துள்ளார். இந்த கூடுதல் வரி விதிப்பு நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஏற்கெனவே 30 சதவீத வரி உள்ள நிலையில் அடுத்த மாதம் 1-ம் தேதி முதல் வரி 130 சதவீதமாக அதிகரிக்க உள்ளது.