ஸ்ரீசன் பார்மா இருமல் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமங்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு அந்நிறுவனம் மூடப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இருமல் சாப்பிட்ட 22 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். ‘கோல்ட்ரிப்' என்ற இருமல் மருந்தை சாப்பிட்டதால் இந்த குழந்தைகள் உயிரிழந்ததாக தெரிய வந்தது.
இந்த மருந்து தயாரிக்கும் ஸ்ரீசன் பார்மா என்ற நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ளது. 22 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து மத்தியப்பிரதேச மாநில தனிப்படை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், ‘கோல்ட்ரிப்'மருந்தை தயாரித்த ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டது. அதன் உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்டார். தற்போது அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, ஸ்ரீசன் பார்மா இருமல் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமங்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு அந்நிறுவனம் மூடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்," காஞ்சிபுரம் முதுநிலை மருந்துகள் ஆய்வாளர் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, துறை ரீதியான மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் முதுநிலை மருந்துகள் ஆய்வாளர் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, துறை ரீதியான மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இன்று (அக்டோபர் 13) ஸ்ரீசன் பார்மசியூட்டிகள் நிறுவனத்தின் மருந்து தயாரிக்கும் உரிமங்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு அந்நிறுவனம் மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அமைந்துள்ள இதர மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மீது விரிவான ஆய்வு மேற்கொள்ள ஆணைகள் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.