கிட்னி முறைகேடு தொடர்பான வழக்கில், தமிழக அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் ஏழைத் தொழிலாளர்களை புரோக்கர்கள் மூளைச்சலவை செய்து, சட்டவிரோதமாக சிறுநீரகத்தை தானம் பெற்றனர். திருச்சி, பெரம்பலுாரில் 2 தனியார் மருத்துவமனைகள் இதில் ஈடுபட்டன. திமுக பிரமுகருக்கு சொந்தமான மருத்துவமனை என்பதால், தமிழக அரசு முறையாக விசாரிக்க வாய்ப்பில்லை. வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பரமக்குடியை சேர்ந்த சத்தீஸ்வரன் என்பவர் மனுதாக்கல் செய்தார்.
இதையடுத்து கிட்னி விற்பனை முறைகேடு தொடர்பான வழக்குகளை விசாரிக்க தென்மண்டல ஐ.ஜி பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கு இன்று (அக்டோபர் 10) உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, என்.வி.அஞ்சரியா அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், 'சிறப்பு புலனாய்வுக்குழுவை எதிர்க்கவில்லை, அதிகாரி நியமனத்தை மட்டுமே எதிர்க்கிறோம். நாங்கள் தரும் அதிகாரிகள் பட்டியலில் தகுதியானவர்களை நீதிமன்றம் நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால், இந்த வழக்கில் தமிழக அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. கிட்னி முறைகேடு குறித்து சிறப்பு விசாரணைக்குழுவை அமைத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறி வழக்கு விசாரணையை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.