குற்றவாளிகளாக இருந்தாலும் சரி, பயங்கரவாதிகளாக இருந்தாலும் சரி, அவர்களிடம் இரக்கம் காட்ட தேவையில்லை. அவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
வெளிநாடுகளுக்கு தப்பியோடிய குற்றவாளிகளை இந்தியாவிடம் ஒப்படைப்பது, அவர்களை நாடு கடத்தி அழைத்து வருவதில் உள்ள சவால்கள் குறித்த மாநாடு புதுடெல்லியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அவர் மாநாட்டில் பேசுகையில், " இந்திய எல்லைக்கு வெளியே இருந்து குற்றம், பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்களை நீதியின் முன் நிறுத்த பாடுபடுவோம். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், இந்தியா தனது எல்லைகளின் பாதுகாப்பை மட்டுமல்லாமல், சட்டத்தையும் வலுப்படுத்துவதில் முன்னேறி வருகிறது.
பொருளாதார குற்றவாளிகளாக இருந்தாலும் சரி, சைபர் குற்றவாளிகளாக இருந்தாலும் சரி, பயங்கரவாதிகளாக இருந்தாலும் சரி, அவர்களிடம் இரக்கம் காட்ட தேவையில்லை. அவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும். குற்றவாளிகளுக்கு எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு சீக்கிரமாக தண்டனை பெற வேண்டும். ஊழல், பயங்கரவாதம் மற்றும் இந்தியாவிற்கு வெளியே இருந்து செயல்படும் ஒவ்வொருவருக்கு எதிராக நாம் பூஜ்ஜிய சகிப்புத் தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்" என்றார்.