பிஹார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் எனஜன்சுராஜ் கட்சியின் வேட்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
பிஹார் சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 என இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டத் தேர்தலின்போது 121 தொகுதிகளுக்கும். 2-ம் கட்டத் தேர்தலின்போது 122 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்தத் தேர்தலில், பாஜக - ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் தலைமையிலான மகாகட்பந்தன் கூட்டணியும் மோழகின்றன. ஜன்சுராஜ் கட்சியின் தலைவராக உள்ள தேர்தல் வியூக அமைப்பாளரான பிரசாந்த் கிஷோர் தனது சொந்த தொகுதியான கர்கஹார் அல்லது ரகோபூர் தொகுதியில் போட்டியிடப் போவதாக முன்பு அறிவித்திருந்தார்.
ஆனால், ராகோபூர் தொகுதிக்கு ஜன்சுராஜ் கட்சி, சஞ்சல் சிங்கை தற்போது வேட்பாளராக அறிவித்துள்ளது. இந்த தொகுதி ஆர்ஜேடி கோட்டையாகும். எனவே, அவர் இந்த தொகுதியில் போட்டியிட்டிருந்தாலும் கடுமையான போட்டியை எதிர்கொண்டிருப்பார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரசாந்த் கிஷோர் தனது கட்சியின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "வரவிருக்கும் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. கட்சி பணிகளில் கவனம் செலுத்த இருக்கிறேன். அனைத்து தொகுதிகளிலும் ஜன்சுராஜ் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப் போகிறேன்.
பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வியை தழுவும். அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டார்கள். நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் 25 இடங்களில் வெற்றி பெறுவதற்கு கூட கடுமையாக போராட வேண்டியதாக இருக்கும். நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக வர வாய்ப்பில்லை. இந்தியா கூட்டணியின் நிலைமையும் தற்போது சரியாக இல்லை.
ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸுக்கு இடையே தொகுதிப் பங்கீட்டில் மோதல் ஏற்பட்டுள்ளது. நாங்கள் குறைந்தது 150 இடங்களை வெல்ல இலக்கு நிர்ணயித்துள்ளோம். அதற்கும் குறைவான இடங்களில் வென்றாலும் அது எங்களுக்கு தோல்விதான்” என்றார்.