டெல்லியில் கார் குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் உள்ள சதிகாரர்கள் தப்ப முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
பூடானுக்கு இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். அங்கு திம்புவில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அங்கு அவர் பேசுகையில், “ நான் மிகவும் கனத்த இதயத்துடன் இன்று இங்கு வந்துள்ளேன். டெல்லியில் நேற்று மாலை நடந்த கொடூரமான சம்பவம் அனைவரையும் மிகவும் வருத்தப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரத்தை நான் புரிந்துகொள்கிறேன். இன்று முழு தேசமும் அவர்களுடன் நிற்கிறது.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் அனைத்து நிறுவனங்களுடனும் நான் நேற்று இரவு முழுவதும் தொடர்பில் இருந்தேன். எங்கள் விசாரணை அமைப்புகள் இந்த சதித்திட்டத்தின் காரணத்தை கண்டுபிடிக்கும். இதற்குப் பின்னால் உள்ள சதிகாரர்கள் தப்ப விடப்படமாட்டார்கள். இந்த கொடிய சம்பவத்துக்கு பின்னால் உள்ள அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்” என்றார்.




