திருமணத்தை மீறிய உறவில் இருந்த மனைவியை வெட்டிக்கொலை செய்து அந்த உடல் அருகே கணவர் செல்ஃபி எடுத்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி ஸ்ரீ பிரியா. இந்த தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவர், குழந்தைகளை பிரிந்து ஸ்ரீபிரியா கோவை சென்று விட்டார். அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த வந்த அவர் காந்திபுரம் பகுதியில் உள்ள பெண்கள் தங்கும் விடுதியில் தங்கியிருந்தார்.
இந்த நிலையில், பாலமுருகனின் உறவினர் இசக்கி என்பருடன் ஸ்ரீபிரியாவிற்கு திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த பாலமுருகன் மனைவியை கண்டித்துள்ளார். இந்த நிலையில், ஸ்ரீபிரியாவுடன் எடுத்த புகைப்படத்தை பாலமுருகனுக்கு இசக்கி அனுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன் கோவைக்கு நேற்று இரவு வந்துள்ளார்.
இன்று காலை தனது மனைவி தங்கியிருந்த விடுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு பாலமுருகனுக்கும், ஸ்ரீபிரியாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மறைத்து வைத்திந்த அரிவாளால் ஸ்ரீபிரியாவை சரமாரியாக பாலமுருகன் வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே ஸ்ரீபிரியா உயிரிழந்தார்.
இதன் பின் மனைவியின் உடல் அருகே அமர்ந்து செல்ஃபி எடுத்த பாலமுருகன், துரோகத்தின் சம்பளம் மரணம் என்று அந்த புகைப்படத்தை தனது செல்போன் ஸ்டேட்டஸாக வைத்துள்ளார். கொலை நடந்த தகவல் அறிந்த ரத்தினபுரி போலீஸார், விரைந்து சென்று பாலமுருகனை கைது செய்தனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

