தென்கொரியாவைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனம் ஆந்திராவிற்கு சென்றுவிட்டதால் தமிழகத்திற்கு கிடைக்க இருந்த 20 ஆயிரம் நேரடி வேலைவாய்ப்பு நழுவிவிட்டது என தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதல்வர் ஸ்டாலினும், தொழில் துறை அமைச்சரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் நிலையில், அவர்கள் பெருமையாக அறிவித்த முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்கு நகர்ந்து வருகின்றன.
தென் கொரிய நிறுவனம் வாசவுங் ரூ. 1720 கோடி முதலீட்டில், 20,000 நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பெரிய அளவிலான காலணிகள் உற்பத்தி நிலையத்தை அமைக்க ஒப்புக் கொண்டதாக தமிழக தொழில் துறை அமைச்சர் அறிவித்தார்.
இந்த முதலீட்டை மூன்று மாதங்களுக்குள் ஆந்திரப்பிரதேசத்துக்கு மாற்ற வாசவுங் தீர்மானித்துள்ளது. பிற மாநிலங்கள் உலகளாவிய உற்பத்தியை ஈர்க்க வேகமாக செயல்படும் நேரத்தில், அலட்சியம் மற்றும் நிர்வாகப் பற்றாக்குறையால் தமிழகம் தனது நிலையை இழந்து வருகிறது. தமிழக ஆட்சி நிர்வாகத்தின் மீதான சாதகமான எண்ணம் இல்லாததால் சர்வதேச நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்கு செல்கிறது.
ஒரு காலத்தில் வாய்ப்புகளின் நிலமாக இருந்த தமிழகத்தை, திமுக தவறவிட்ட வாய்ப்புகளின் நிலமாக மாற்றியுள்ளது. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார். இவ்விஷயத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கண்டனம் தெரிவித்துள்ளர்.




