கரூர் கூட்ட நெரிசலுக்கு தவெக தலைவர் விஜய் தாமதமாக வந்ததே காரணம் என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27-ம் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் இன்று கொண்டு வரப்பட்டது.
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "கரூர் துயரச் சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் மனதையும் உலுக்கியது. இறந்தவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலி, உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். அரசின் நடவடிக்கைகள், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கிறேன்.
கரூரில் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27-ம் தேதியில் தவெக அனுமதி கோரிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்பதாலும், பொதுமக்களுக்கு தொல்லை ஏற்படும் என்பதாலும், பாதுகாப்பு காரணங்களாலும் அனுமதி அளிக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து வேலுச்சாமிபுரத்தில் மக்கள் சந்திப்பு நடத்த கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மனு அளித்தார். அவரின் மனு ஏற்கப்பட்டு 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது.
தமிழக காவல்துறையின் சார்பாக பாதுகாப்பு பணிக்காக அன்றைய நாளில் மொத்தம் 606 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். வழக்கமாக அரசியல் கூட்டங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை விட அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டது. கூட்டத்திற்கு வருபவர்களுக்கான எந்தவொரு அடிப்படை வசதிகளையும் தவெக செய்யவில்லை.
காத்திருந்த மக்களுக்கு போதிய குடிநீர் இல்லை. உணவு வழங்க எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. இயற்கை உபாதைகளை கழிக்க பெண்களால் வெளியில் செல்ல முடியவில்லை. கூட்டத்தில் சிக்கியவர்களை காப்பாற்றத்தான் ஆம்புலன்ஸ் வந்தது. மீட்புப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்றபோது தவெகவினர் ஆம்புலன்ஸ் வாகனங்களை தாக்கினர். கரூர் பரப்புரையின்போது ஜெனரேட்டர் இருந்த தகரக்கொட்டகைக்குள் கூட்டம் புகுந்தது. மின்சாரம் தாக்குவதை தவிர்க்க ஜெனரேட்டர் ஆபரேட்டர் மின்சாரத்தை நிறுத்தியுள்ளார்.
கரூர் துயர சம்பவம் நடந்த அதே இடத்தில் 2 நாட்களுக்கு முன் அதிமுகவின் கூட்டம் நடந்துள்ளது. அங்கு கூடியவர்கள் மிகவும் கட்டுப்பாட்டுடன் கூடி கலைந்தனர். இதற்கு நேர்மாறாக தவெக கூட்டத்தில் நடந்துள்ளது. 12 மணிக்கு கட்சித் தலைவர் வரவிருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் செய்தியாளர் சந்திப்பிலும், சமூக ஊடகங்களிலும் தெரிவித்திருந்தார்.
ஆனால், தவெக தலைவர் சுமார் 7 மணி நேரம் தாமதமாகவே கூட்டத்திற்கு வந்தார். இந்த காலதாமதம் கூட்ட நெரிசலுக்கு காரணமாக அமைந்தது" என்று அவர் பேசினார். "எங்கள் தலைவர் விஜய் தாமதமாக வரவில்லை. கரூரில் காவல்துறை அனுமதி வழங்கிய நேரத்துக்குள் அங்கு வந்துவிட்டோம்" என தவெகவின் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஏற்கெனவே பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.