வியட்நாமில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
வியட்நாம் நாட்டின் குவாங்னாம் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஹங்க், டா நங், ஹைய் அன் ஆகிய நகரங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வெள்ளப்பகுதிகளில் சிக்கியருந்த மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், வியட்நாமில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 11 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 5 பேர் மாயமான நிலையில் அவர்களை தேடும் பனி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அடுத்த சில நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வியட்நாம் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.




