போதைப் பொருட்களில் இருந்து மாணவர்களை தடுப்பதற்கான சமத்துவ நடைபயணம் ஜனவரி 2-ம் தேதி திருச்சியில் தொடங்க உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று சந்தித்தார். இதன் பின் வைகோ செய்தியாளர்களிடம் கூறுகையில், "பள்ளி, கல்லூரி மாணவர்களைச் சீர்கெடுக்கும் மது மற்றும் போதை பொருட்களில் இருந்து தடுப்பதற்கான சமத்துவ நடைப்பயணம் ஜனவரி 2-ம் தேதி திருச்சி மாநகரில் தொடங்க உள்ளேன்.
தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறவும் ஒவ்வொரு கிராமமாக சென்று மக்களை சந்திக்க உள்ளேன். திருச்சியில் ஜனவரி 2-ம் தேதி தொடங்கும் சமத்துவ நடைபயணம் ஜனவரி 12-ம் தேதி மதுரையில் நிறைவடைகிறது.திமுக ஆட்சி மீண்டும் தொடர மற்றும் பல்வேறு கோரிக்கைகளுடன் 180 கிலோ மீட்டர் சமத்துவ நடைபயணம் தொடங்க உள்ளது.
திருச்சியில் தொடங்கப்படும் இந்த நடைபயணத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார். மதுரையில் முடியும் இந்த நடைப்பயண நிறைவு விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை, சிபிஐ, சிபிஎம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொள்வார்கள். இந்த சமத்துவ நடைப்பயணம் என்னுடைய ஒன்பதாவது நடைபயணம்” என்றார்.




