டெல்லி குண்டு வெடிப்பில் தொடர்புடைய காரின் உரிமையாளர் டாக்டர் உமர் முகமது என்பது கண்டறியப்பட்டுள்ளது. அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
டெல்லி செங்கோட்டை அருகே நேற்று இரவு கார் வெடித்து சிதறியது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த குண்டு வெடிப்பில் தொடர்புடைய கார் புல்வாமாவை சேர்ந்த டாக்டர் உமர் முகமது என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நிறைந்த பகுதி புல்வாமா என்பதால் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. காரின் முதல் உரிமையாளர் சல்மானுக்கு பிறகு வாங்கியவர்கள் பெயர் மாற்றம் செய்யாமல் இயக்கியது அம்பலமாகியுள்ளது. சல்மானிடம் இருந்து நதீம் என்பவருக்கு கார் விற்கப்பட்ட நிலையில் அது மூன்றாவதாக காஷ்மீர் புல்வாமாவை சேர்ந்த டாக்டர் உமர் முகமதுவிற்கு கைமாறியுள்ளது. இதனால் அவரை போலீஸார் தேடி வருகின்றனர். மேலும் குண்டு வெடிப்பில் இறந்தவர்களில் அவரும் இருக்கிறாரா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹரியாணா மாநிலம் பரிதாபாதில் உள்ள பல்கலையில் மருத்துவ விரிவுரையாளராக பணியாற்றி வரும் டாக்டர் முபாஸில் ஷகீலுக்கும் இந்த சதியில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதன் தொடர் விசாரணையில் துப்பாக்கி, வெடிபொருட்கள் ஏராளமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த கும்பலிடம் இருந்து 2,900 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட அதே நாளில் டெல்லியில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. எனவே, வெடிபொருள் பதுக்கிய கும்பலுக்கும், டெல்லி குண்டு வெடிப்பிற்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுவடைந்துள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் உச்சக்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.




