டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய 4 டாக்டர்களின் பெயர்கள் தேசிய மருத்துவப் பதிவேட்டிலிருந்து நீக்கி தேசிய மருத்துவ ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே மெட்ரோ ரயில் நிலைய நுழைவு வாயிலில் நவம்பர் 10-ம் தேதி கார் குண்டு வெடித்தது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 24 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏறபடுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பலர் ஹரியாணா மாநிலம், பரிதாபாத்தில் உள்ள அல் ஃபலா பல்கலைகழகத்தில் படித்தவர்களாகவோ, பணியாற்றியவர்களாகவோ இந்தனர். இந்த நிலையில், குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையில் அல் ஃபலா பல்கலைக்கழகத்தை சேர்ந்த 3 டாக்டர்கள் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் ஹரியாணா மாநிலம் நூ மாவட்டத்தில் மேலும் 2 டாக்டர்கள் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கார் குண்டு வெடிப்பு சம்பவம், மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்குகளில், கைது செய்யப்பட்ட முசாஃபா் அகமது, அடீல் அகமது ராத்தா், முசாமில் ஷகீல், ஷஹீன் சயீத் ஆகியோர் மீது நாட்டின் இறையாண்மைக்கு எதிரான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நான்கு பேரும் டாக்டர்கள் என்பதால் தேசிய மருத்துவ ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் தேசிய மருத்துவ பதிவேட்டில் இருந்து 4 பேரின் பெயர்களையும், நீக்கி தேசிய மருத்துவ ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
எனவே அவா்கள் 4 பேரும் இனி இந்தியாவில் எந்த பகுதியிலும் மருத்துவா்களாக செயல்படவோ, நாட்டில் எங்கும் மருத்துவ ரீதியிலான சந்திப்புகளை நடத்தவோ முடியாது. சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ், அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதை தொடா்ந்து இந்த கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இந்த நான்கு மருத்துவர்களின் செயல், மருத்துவர்களிடம் எதிர்பார்க்கப்படும் நேர்மை, நல்லொழுக்கம், மக்கள் நம்பிக்கை ஆகியவற்றுக்கு ஏற்றதல்ல என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.




