செங்கல்பட்டு அருகே அரசு பஸ், வேனுடன் நேருக்கு நேர் மோதியதில் 2 தனியார் நிறுவன் பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னையில் இருந்து புதுச்சேரி சென்ற அரசு பஸ் செங்கல்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் இன்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த வேனும், பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் வேன் நொறுங்கியது. இதனால் வேனில் பயணம் செய்த தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் உயிரிழந்த 2 பெண்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். சதுரங்கப்பட்டினம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


