கோவை வரும் பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச உள்ளார்.
கோவை கொடிசியா அரங்கில் தென்னிந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் நாளை (நவம்பர் 19) முதல் 21-ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு இயற்கை விவசாயிகள் மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்து பேசுகிறார். மேலும், சிறப்பாக செயல்பட்ட 18 விவசாயிகளுக்கு விருது வழங்குகிறார்.
இந்த மாநாட்டில் இயற்கை விவசாயிகள், இளம் விஞ்ஞானிகள் கலந்து கொள்கின்றனர். இதில், பங்கேற்க பிரதமர் மோடி நாளை மதியம் 12.30 மணிக்கு ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து தனி விமானம் மூலம் மதியம் 1.25 மணிக்கு கோவை விமான நிலையம் வருகிறார்.
அங்கிருந்து மதியம் 1.30 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு 1.40 மணிக்கு கொடிசியா அரங்கம் செல்கிறார். அங்கு விழாவில் கலந்து கொண்ட பின்னர் மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு 3.30 மணிக்கு விமான நிலையத்தை அடைகிறார். பின்னர், விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
பிரதமர் மோடியின் கோவை வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே கோவை வரும் பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி பழனிசாமி நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி மற்றும் தொகுதி நிலவரங்கள் குறித்து அவர் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




