ஜனாதிபதி திரவுபதி முர்மு வந்த ஹெலிகாப்டர் சக்கரம் கான்கிரீட் தளத்தில் புதைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு நான்கு நாள் பயணமாக நேற்று கேரளா வந்தார். திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வந்தடைந்த அவரை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத், முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக ஆளுநர் மாளிகைக்கு சென்ற குடியரசுத் தலைவர், இன்று காலை சாமி தரிசனம் செய்வதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஹெலிகாப்டரில் நிலக்கல் சென்றார்.
மோசமான வானிலை காரணமாக நிலக்கல் ஹெலிகாப்டர் தளத்தில் இறங்க வேண்டிய ஹெலிகாப்டர் பிரமாடம் என்ற இடத்தில் தற்காலிகமாக தயார் செய்த ஹெலிகாப்டர் தளத்தில் இறக்கப்பட்டது. ஜனாதிபதி திரவுபதி முர்மு ஹெலிகாப்டரில் இருந்து வெளியே வந்த பிறகு தான் ஹெலிகாப்டரின் டயர் கான்கிரீட்டில் புதைந்திருப்பதை பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்தனர்.
புதியதாக அமைக்கப்பட்ட ஹெலிகாப்டர் தளம் எடை தாங்காமல் இறங்கியது தெரிய வந்தது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார், தீயணைப்புத்துறையினர், பாதுகாப்பு படையினர் இணைந்து ஹெலிகாப்டரை மீட்டு வேறு இடத்தில் நிறுததினர். ஹெலிகாப்டர் கான்கிரீட் தளத்தில் சிக்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.




