ஜி 20 மாநாட்டை ஏற்பாடு செய்த தென்னப்பிரிக்கா அதிபருக்கு நன்றி என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தென் ஆப்ரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் இந்தியா,பிரேசில், தென்னாப்பிரிக்கா நாடுகளின் தலைவர்கள் உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவின் அதிபர் சிறில் ராமபோசாவை பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்து பேசினார்.
அப்போது, வர்த்தகம், முதலீடு, அரிய வகை கனிமங்கள் இறக்குமதி, செயற்கை நுண்ணறிவு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. மேலும், இத்தாலியின் ஜியோர்ஜியா மெலோனி, ஜப்பானின் சனே டகைச்சி மற்றும் கனடாவின் மார்க் கார்னி உள்ளிட்ட பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தினார்.
இந்த நிலையில், தென்னாப்பிரிக்கா பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி டெல்லி திரும்பினார். இந்த பயணம் குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், " வெற்றிகரமான ஜோஹன்னஸ்பர்க் ஜி 20 மாநாடு, நிலையான வளர்ச்சியை உருவாக்கும். உலகத் தலைவர்களுடனான எனது சந்திப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன. மேலும் பல்வேறு நாடுகளுடனான இந்தியாவின் இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்தும். ஜி 20 உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக தென்னாப்பிரிக்காவின் அற்புதமான மக்கள், அதிபர் சிறில் ராமபோசா மற்றும் அந்நாட்டு அரசிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.




