பாலஸ்தீன அகதிகள் முகாமில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இஸ்ரேல், ஹமாஸ் இடையே போர் நடந்து வருகிறது. இதில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது லெபானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதனால் லெபனான் மீது இஸ்ரேல் பதிலடி நடத்தியது. இதன் பின்னர் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இருநாடுகளுக்கு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஆனாலும், லெபனானின் தெற்கில் 5 இடங்களில் இஸ்ரேல் தனது படைகளை நிறுத்தியுள்ளது. அத்துடன் அங்கிருந்து ஹிஸ்புல்லா அமைப்பினரின் நிலைகளை குறிவைத்து தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. தற்போது இஸ்ரேல் படையினர் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர். இஸ்ரேல் படைகள் குவிக்கப்பட்டிருக்கும் லெபனானின் தெற்கு பகுதியில் இருந்து ஆயுதங்களை ஹிஸ்புல்லா அமைப்பினர் குறைக்க வேண்டும் என்று இஸ்ரேல் எச்சரித்திருந்தது.
இந்த நிலையில், தெற்கு லெபனானில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 4 பேர் காயமடைந்தனர். ஹமாஸிற்கான பயிற்சி மையமாக அகதிகள் முகாம் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.




