அமெரிக்காவின் எச்சரிக்கை காரணமாக வெனிசுலாவுக்கான விமானங்களை பெரும்பாலான விமான நிறுவனங்கள் ரத்து செய்துள்ளன.
அமெரிக்காவுக்கும், வெனிசுலாவுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் இருந்து வருகிறது. போதைப்பொருள் கடத்தியதாக கூறி வெனிசுலா கப்பல்கள் மீது அமெரிக்க தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால், அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டை வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ தொடர்ந்து மறுத்து வருகிறார்.
இந்நிலையில் கரீபியன் கடற்பகுதியில் போர்க் கப்பல்கள், போர் விமானங்களை அமெரிக்கா குவித்து வருகிறது. அத்துடன், உலகின் சக்தி வாய்ந்த விமானம் தாங்கிய போர்க்கப்பலையும் அனுப்பி வைத்துள்ளது. இது, போருக்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
இதற்கு பதிலடி கொடுக்க வெனிசுலா ஆயத்தமாகி வருகிறது. இதன்படி சிறப்பு அவசரநிலையை வெனிசுலா அதிபர் நிகோலஸ் அறிவித்துள்ளார். அத்துடன் நிலம், கடல், வான்வெளியில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த சூழலில், ராணுவ நடவடிக்கைகள் காரணமாக வெனிசுலா வான்வெளியில் பறக்கும் போது எச்சரிக்கையாக இருக்குமாறு அமெரிக்க பெடரல் விமான நிர்வாகம் எச்சரித்துள்ளது. இதனால் உலகளாவிய பெரும்பாலான விமான நிறுவனங்கள் வெனிசுலாவுக்கான விமானங்களை ரத்து செய்துள்ளன.
இதன்படி ஸ்பெயின், போர்ச்சுகல், சிலி, கொலம்பியா, பிரேசில், டிரினிடாட் டொபாகோ ஆகிய நாடுகளைச் சேர்ந்த சில விமான நிறுவனங்கள் வெனிசுலாவுக்கான விமான சேவைகளை ரத்து செய்துள்ளன. மேலும் 6 விமான நிறுவனங்கள் காலவரையின்றி விமானங்களை நிறுத்தி வைத்துள்ளது. துருக்கி ஏர்லைன்ஸ் இன்று (நவம்பர் 24) முதல் நவம்பர் 28-ம் தேதி வரை விமான சேவைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.




