ராஜபாளையத்தில் உள்ள கோயிலில் திருட்டை தடுக்க முயன்ற பாதுகாவலர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் இரவு காவலர்களாக பேச்சிமுத்து(50), சங்கரபாண்டியன்(65) ஆகியோர் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில், நேற்று நள்ளிரவு இந்த கோயிலுக்குள் திருட்டு கும்பல் நுழைந்துள்ளது. அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை திருட முயன்றுள்ளது.
இதைப் பார்த்த பேச்சிமுத்து, சங்கரபாண்டியன் ஆகியோர் தடுக்க முயன்றனர். அவர்களை அந்த கும்பல் வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டது. இதுகுறித்த தகவல் அறிந்த போலீஸார் விரைந்து சென்று கோயிலில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட இரவு நேர காவலர்கள் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், கோயிலில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். கோயிலில் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




