கேரளாவில் பிரபல நடிகை 8 ஆண்டுகளுக்கு முன்பு காரில் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் இன்று நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கேரளா மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே அத்தாணி பகுதியில் 17.2.2017 அன்று பிரபல நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடிந்து கேரவனில் கொச்சிக்கு சென்று கொண்டிருந்தார் அப்போது ஒரு கும்பல் நடிகையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்பட்டது. இதுகுறித்த புகாரின் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது பெரும்பாவூரை சேர்ந்த பல்சர் சுனில் என்ற சுனில் குமார் என்பவர் உள்பட சிலர் பலாத்கார செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து சுனீலை கைது செய்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பிரபல நடிகர் திலீப்பிற்கும், அந்த நடிகைக்கும் இருந்த முன்விரோதம் காரணமாக, திலீப் சதி திட்டம் தீட்டி நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து கடந்த 10.7.2017 அன்று நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். அவர் அங்கமாலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஆலுவா கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
இவ்வழக்கில் நடிகர் திலீப் உள்பட 8 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை 8.10.2018 அன்று எர்ணாகுளம் முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் தொடங்கியது.
இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க கோரி நடிகர் திலீப் கடந்த 2018-ம் ஆண்டு கேரள உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் சாட்சிகளிடம் நான்கரை ஆண்டு விசாரணை நடந்தது. நடிகையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவத்தில், நடிகர் திலீப் மீதான வழக்கில் இன்று (டிசம்பர் 8) தீர்ப்பு வழங்கப்படும் என்று எர்ணாகுளம் நீதிமன்றம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை எர்ணாகுளம் நீதிமன்றம் இன்று வழங்கியது. அந்த தீர்ப்பில், நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப் குற்றவாளி இல்லை. திலீப் மீதான எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை. 6 நபர்களை குற்றவாளிகள் என அறிவித்தது. அவர்களுக்கு தரப்பட்ட ஜாமீனை ரத்து செய்து உடனடியாக சிறையில் அடைக்க உத்தரவிட்டது.




