அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய போலீஸாருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இன்று (டிச.8) வெளியிட்டுள்ள அறிக்கையில், " திமுக ஆட்சியில் ஊழல் நடப்பது என்பது பெரிய விஷயமல்ல. ஆனால், தற்போது மலைபோல ஆதாரங்களுடன் தவிர்க்க முடியாத நிலையில் இருக்கிறது.
அமைச்சர் கேஎன்.நேரு வேலைவாய்ப்பு நியமனத்திற்கு ரூ.888 கோடி லஞ்சம் வாங்கியதைத் தொடர்ந்து, தற்போது 1,020 கோடி ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக 252 பக்க அறிக்கையை டிஜிபியிடம் அமலாக்கத்துறை சமர்ப்பித்துள்ளது. உறவினர்கள் மூலம் ஒப்பந்ததாரர்களிடம் பணம் வாங்கி, மிகப்பெரிய அளவிலான கொள்ளை நடந்துள்ளது. அது மட்டுமில்லாமல், வாட்ஸ்அப் உரையாடல்கள், ஹவாலா பணமோசடி குறித்த விபரங்களையும் அமலாக்கத்துறை கொடுத்துள்ளது.
கடந்த 4 ஆண்டுகளாக திமுக அரசில் சிறப்பாக செயல்பட்ட ஒரே துறை, கலெக்சன், கமிஷன் மற்றும் கரப்ஷன் துறை மட்டும் தான். உடனடியாக, டெண்டர் முறைகேடு மற்றும் பணியாளர் நியமனத்தில் லஞ்சம் பெற்ற புகார் குறித்து வழக்குப்பதிவு செய்ய போலீஸாருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.




