இந்திய அரிசி, கனடா உரங்கள் மீது புதிய வரிகளை விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றத்தில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். எரிசக்தி பயன்பாடு, குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு, அமெரிக்க குடியேற்ற கொள்கையில் மாற்றம், உலகின் பல்வேறு நாடுகளில் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு பயிற்சி உள்ளிட்ட திட்டங்களுக்காக அமெரிக்கா அளித்து வந்த நிதி உதவி நிறுத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
அத்துடன் இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்தது. இதனால் இந்தியாவில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. மேலும், இந்தியாவுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை அதிபர் டிரம்ப் நிர்வாகம் முன்வைத்தது. இந்நிலையில், இந்திய அரிசி, கனடா உரங்கள் மீது புதிய வரிகளை விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் விவசாய பிரதிநிதிகளுடன் அதிபர் டிரம்ப் ஆலோசனை நடத்தினார். அப்போது மானிய விலையில் அரிசி இறக்குமதி செய்யப்படுவதால் தாங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக விவசாயிகள், கூறினர். இதையடுத்து இந்த பிரச்சனையை கவனித்து கொள்வதாக அவர்களுக்கு டிரம்ப் உறுதியளித்தார். மேலும், அமெரிக்க சந்தைகளைப் பாதிக்கும் நாடுகள் குறித்து அடையாளம் காணுமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார்.




